Alaioli
மூன்று நாள்கள் பக்தி வெள்ளத்தில் சுங்கை பெசார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். கரகம் முதல் மஞ்சள் நீராட்டு வரை அம்மன் திருவிழா கோலாகலம்!

சுங்கை பெசார், ஜூன் 1- பக்தர்களின் பேராதரவுடனும், அம்மனின் அருளாசியுடனும் நடைபெற்ற சுங்கை பெசார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 94ஆம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த மூன்று நாட்களாக பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. கரகம், காவடி, ரத உற்சவம், மஞ்சள் நீராட்டு, அம்மன் தாலாட்டு வைபவம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளால் ஆலய வளாகம் முழுவதும் திருவிழா களைகட்டியது. 


திருவிழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை இரவு, பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து கரகம் ஏந்தி அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பக்தி இசை முழங்க நடைபெற்ற கரக ஊர்வலம், பக்தர்களின் மனதில் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தியது. கரகம் சுமந்த பக்தர்களின் அர்ப்பணிப்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

அடுத்த நாள் சனிக்கிழமை காலை தொடங்கி பக்தர்கள் பக்தி பரவசம் கமழ பால்குடம், காவடிகள், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு தங்களின் நேர்த்திக் கடனை மன நிறைவுடன் செலுத்தினர். மேலும் காவடி ஊர்வலத்தின் போது பக்தர்கள் எழுப்பிய பக்தி முழக்கங்கள் ஆலய சூழலை மேலும் ஆன்மிகமயமாக மாற்றின. 


அதோடு சனிக்கிழமை இரவு  அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா வந்தபோது, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். வீதியெங்கும் பக்தி அலை பரவியதுடன், குடும்பம் குடும்பமாக மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சள் நீராட்டு வைபவம் பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மஞ்சள் நீரைத் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பக்தர்கள், அம்மனின் அருளால் வாழ்வில் நன்மைகள் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.


மேலும் அன்றிரவு அம்மன் தாலட்டு வைபவத்துடன் இத்திருவிழா இனிதே நிறைவுற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா, பக்தி, பாரம்பரியம் மற்றும் சமூக ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இத்திருவிழா எந்தவொரு தங்கும் தடையும் இன்றி வெகு விமரிசையாக நடைபெற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய  அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தங்களின் மனமார்ந்த நன்றியைப் பதிவு செய்து கொண்டனர்.


Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News